Wednesday, July 2, 2014

மன அழுத்தமுள்ள மாணவர்களை அணுகுவது எப்படி? 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

      குடும்பப் பிரச்னை, தேர்வு பயம், வளர் இளம் பருவத்தினருக்குரிய பிரச்னைகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்துடன் உள்ள மாணவர்களையும், கற்றலில் குறைபாடுள்ளவர்களையும் எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.



          பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் மாநிலம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



            ஒவ்வொரு மாணவரையும் எப்படி அணுக வேண்டும், அவரது குடும்பப் பின்னணியோடு இணைத்து பிரச்னைகளை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களின் பிரச்னைகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது தொடர்பான பயிற்சிகளும் இதில் வழங்கப்பட உள்ளன.

பள்ளி ஆசிரியரை மாணவரே கொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 70 ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி முதல் கட்டமாக சென்னையில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இடது கையால் எழுதும் பழக்கத்துக்கும் மரபணுவுக்கும் உள்ள தொடர்பு, மாணவர்கள் விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்றவற்றுக்கான உளவியல் காரணங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர் விருதகிரிநாதன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மன நல ஆலோசகர்கள், மன நல மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

No comments: