Monday, July 7, 2014

தொடர் மாற்றங்களால் ஏமாற்றம் : தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் சான்றிதழ் கிடைக்கவில்லை: ஆசிரியர் கனவு நனவாவது எப்போது?

கடந்த 2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது.  இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட முடிவில் 27 ஆயிரத்து 92  பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில் மாறுதல்  செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர் தேர்ச்சியடைந்தனர். 


தேர்ச்சி  மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்ததால்  மேலும் 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக  தேர்ச்சியடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது. இவர்கள்  அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துள்ளது.  தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட்  ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், முந்தைய வெயிட்டேஜ் முறையை  ரத்து செய்தும், புதிய முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண்  வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இடைநிலை ஆசிரியர்,  பட்டதாரி ஆசிரியர் எத்தனை பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்  என்பது குறித்து அரசு சார்பில் அறிவிப்பில்லை. இந்த கல்வி ஆண்டு  தொடங்கி பள்ளிகள் நடந்து வரும் நிலை யில் இதுவரை ஆசிரியர் பணி  நியமனம் செய்யப்படாததால் தேர்ச்சியடைந்தவர்கள் கடும்  அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, தகுதித்தேர்வில் வெற்றி  பெற்றவர்கள் கூறுகையில், ‘தகுதி தேர்வு அறிவிப்பில் இருந்தே  பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. தெளிவான முடிவில்லாத நிலையில்  தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு பணி நியமனம்  கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விரைவில் பணி நியமனம் செய்ய  நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

No comments: