Monday, July 14, 2014

காமராசர்

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.
தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார் 

"பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள்."

"அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன."

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

கவியரசர் கண்ணதாசன் - காமராசர் தாலாட்டு

தங்கமே! தண் பொதிகைச்
சாரலே! தண்ணிலவே!
சிங்கமே! என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்ட்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையல் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!


மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் காமராஜர். காமராஜரின் வாழ்க்கையென்பது ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்ன என்பதன் விளக்கம் தந்த வாழ்க்கை என்ன தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் காந்தியடிகளின் ‘சத்ய சோதனை’ போன்றதாகும். அதனால் தான் காமராஜரையும், காந்தியடிகளோடு ஒப்புமைப்படுத்தி ‘தென்னாட்டுக் காந்தி’ என்று போற்றிப் புகழுகின்றோம்.



1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.

வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.

கல்விக்கண் கொடுத்தவர்:

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?

உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 - ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.

அரசியல் பணி:

மாநில முதல்வர் இருக்கும் தகுதி பெரும் பணக்கார்ர்களுக்கும் மிட்டாமிராசுதார்ர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் மனிதர் காமராஜர்தான். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்குச் சாவு மணி அடித்தது அவரது மிகப் பெரியச் சாதனை.

பதவி ஆசை அற்றவரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்நேருவிற்குப் பிடிக்காதவர்களைப் பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் காமராஜர் பதவி விலகும் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இது அவரது அரசியல் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டு ஆகும். நேருவுக்குப் பின் லால்பகதூரைப் பிரதமராக்கியது அவரது அரசியல் திறமைக்கு தக்கச்சான்று ஆகும்.

“இந்தியாவைக் காப்போம் - ஜனநாயகத்தைக் காப்போம்” என்பது விருதுநகர் வீர்ரின் வேத வாக்கு.

அணைக்கட்டுகள்:

காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.

மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.

சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.

நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.

1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.

இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.

சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.

சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.

இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொழில் நிறுவனங்கள்:

காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.

இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.

இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

No comments: